சனி, 25 அக்டோபர், 2014

மேக் இன் இந்தியா’

“மேக் இன் இந்தியா” முழக்கத்திற்கு புதிய சின்னம். புதிய இணையதளம், தேசிய தரக் கழகத்திற்கு புதிய தலைவர் என ஜமாய்க்கிறார்கள். இந்து நாளிதழ் கட்டுரையொன்றில் பெங்களூர் தொழிலதிபரும், தட்கசீலா பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஒரு நிபுணர் சொல்வது போல “சத்தம் அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கான திட்டம் இல்லை.”ஆதாரத் தொழில் வளர்ச்சி இல்லாமல் உற்பத்திக்கான உந்துதல் எழாது. நிறைய முதலீட்டோடு, நீண்ட காலத் திட்டமாக வளர வேண்டிய ஆதாரத் தொழில்களை சூ..... மந்திரக்காளி..... என்று மோடியால் உருவாக்க முடியுமா? மும்பையின் ஜவகர்லால் நேரு துறைமுகம்தான் இந்தியச் சரக்கு இறக்குமதியில் 55 சதவீதத்தைக் கையாள்கிறது. ஆனால் அங்கு வந்து இறக்குமதியாகிற சரக்குகள் தில்லிக்கு டெலிவரி ஆக 28 நாட்கள் எடுக்கிறதாம்.
2012ல் ஐஐஎம்- இந்திய போக்குவரத்துக் கழகம் நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் போக்குவரத்து கியூ வரிசைகள் நீள்வதால் ஏற்படுகிற இழப்பு ரூ.60,000 கோடிகளாம்.இந்தியாவின் தேசியச் சுவையாக புளிப்பை அறிவிக்கலாம் போலிருக்கிறது. இதுபோன்ற முழக்கங்கள் எத்தனையோ முறை புளித்திருந்தாலும் மறுபடியும் மறுபடியும் மக்கள் மயங்குகிறார்கள். இந்தியத் துணிகள் ஏற்றுமதிக்காக குர்கானில் “அப்பேரல் இன்டர்நேசனல் மார்ட்” 250 காட்சி அறைகளோடு உருவாக்கப்பட்டது. தற்போது அதில் 94 காட்சி அறைகளில் பூட்டு தொங்குகின்றன. 81 காட்சி அறைகள் வேறு நோக்கங்களுக்கு வாடகைக்கோ, டெக்ஸ்டைல் கல்விக் கழக வகுப்புகளுக்கோ பயன்படுத்தப்படுகின்றன. மீதம் 75 காட்சி அறைகளில்தான் விற்பனை நடக்கிறதாம்.
அவற்றிலும் பல நிரந்தரமாகச் செயல்படுவதில்லை.“மேக் ஃபார் இந்தியா” என்ற இலட்சியமும் இணையாவிட்டால் மேக் இன் இந்தியா முழக்கம் வெற்றுக் கூச்சலாகிவிடுமென நிபுணர்கள் பலர் கருதுகிறார்கள். சந்தை விரிவானால்தான் “மேக் ஃபார் இண்டியா” என்று அழைப்பு விடுக்க முடியும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரியும்போது கூட இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்தால் சந்தை எப்படி விரிவாகும்? ஃபிலிப் கார்ட் “பில்லியன் டே” (நூறு கோடி வணிக தினம்)- அக்டோபர் 6 அன்று கொண்டாடிய போது மூன்று லட்சம் பேர் மதியம் 2 மணிக்குள்ளாக புகுந்து எல்லாவற்றையும் 70 சதம், 80 சதம் தள்ளுபடியில் காலி செய்தார்கள். இப்படி வணிகச் சங்கிலிகளை நொறுக்கி எறியும் போது ஒரு புறம் உயர்தட்டுச் சந்தை பலனடைந்தாலும் மறுபுறம் சங்கிலிகளோடு தொடர்புடைய மக்களின் வாங்கும் சக்தி சரிகிறது. சந்தை சுருங்குகிறது.
இது ஒரு உதாரணமே. சந்தை விரிவாக்கம் இல்லாமல் மேக் ஃபார் இந்தியா எப்படி ஈடேறும்.பர்ஸ்ட் டெலவப் இந்தியா என்பது எப்டிஐ (FDI) க்கு மோடி தந்துள்ள விளக்கம். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கெல்லாம் சைசுக்கேற்ற பூட்டு தேடி அலைகிறார் மோடி. எச்.எம்.டி வாட்ச் கம்பெனியை மூடப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்று தலைமுறைகளின் முதல் வாட்ச் என்ற சென்டிமென்டோடு இருந்த நிறுவனம் அது. எச்.எம்.டி மூடப்படுமென்ற செய்தி வந்தவுடன் பெங்களூரிலுள்ள அதன் காட்சி அறைகளிலெல்லாம் விற்பனை இரட்டிப்பானதாம். இவ்வளவு பிராண்ட் இமெஜ் உள்ள பெருமை மிக்க நிறுவனத்தைப் பாதுகாக்காமல் வளர்க்காமல் மேக் இன் இந்தியா என்றால் யார் நம்புவது?அவுட் சோர்சிங்தான் உலகமயத்தில் இந்தியாவிற்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.
ஆனால் மின்சார வெட்டால் இந்தியாவிலுள்ள அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு ஓராண்டில் ஏற்பட்ட இழப்பு ரூ.1600 கோடியாம்.மலிவான உழைப்பு இந்தியாவில் கிடைக்கிறது. இன்னும் மலிவாக்க சட்டங்களைத் திருத்துகிறறோம். உரிமைகளைப் பறிக்கலாம். பணிப் பாதுகாப்பை பந்தாடலாம். உங்களின் லாபத்தை பெருக்குங்கள் என பன்னாட்டு மூலதனத்திற்கு வைக்கப்படும் தாம்பூலமே “மேக் இன் இந்தியா.”
நன்றி தீக்கதிர் 25.10.2014


கருத்துகள் இல்லை: